வட்டியில்லாக் கடன்,ஜக்காத் வசூல்,ஃபித்ரா வசூல்,சமூக நலத்திட்டங்கள்,மாணவர்களுக்கு வழிகாட்டுதல்

விமான நிலைய விவரங்கள்

விமான நிலைய வருகை புறப்படு விவரங்கள் http://indiaairport.blogspot.com/

செவ்வாய், 8 மார்ச், 2011

மதரஸாக்கள் மாற வேண்டும்

மதரஸாக்கள் மாற வேண்டும்


இன்று மதரஸாக்கள் என்பது கோழைகளாகவும், உலகத்தை பற்றியும், உலக அறிவின் அவசியத்தை பற்றியும் தெரியாத மாணவர்களாகவே உருவாகாக்குகின்றன. குர்ஆனியகலை, ஹதீஸ்களின் கலைகள், ஃபிக்ஹ் சட்டங்கள்,அரபி இலக்கணம் போன்ற விசயங்களை மட்டுமே கற்றுக் கொடுப்பது தான் எங்களின் பணி.அதை முடித்து விட்டு அவர்கள் வெளியில் வந்தால் ஏதாவது ஒரு பள்ளியில் இமாமாக இருப்பார். அல்லது ஏதாவது ஒரு மதரஸாவில் ஆசிரியராக இருப்பார். அத்தோடு தன் வாழ்க்கை முடிந்து விட்டது. என்று தன் வாழ்க்கையை அமைத்து கொள்கின்றனர்.

மதரஸா வாழ்க்கை என்பது ஒரு பொன்னான வாழ்க்கை.மதரஸா என்பது ஒரு பல்கலைக்கழகம் அளவுக்கு உள்ள ஓர் கல்விக் கூடம். அங்கு கல்வி கற்றுக் கொடுக்கும் காலங்களில் சிறப்பான கல்வியைக் கொடுத்து சீரிய புத்தி கூர்மை உள்ளவர்களாக அவர்களை மாற்றி அவர்கள் வெளியில் வரும் போது சமுதாயத்தை வழி நடத்தும் தளபதிகளாக அவர்கள் வர வேண்டும்.

சமூகம்,சமூகத்தைச் சார்ந்த அனைத்து பிரச்சினைகளையும் கையில் எடுத்து நல்லதொரு தீர்வு காணும் நீதிபதிகளாக அவர்கள் வரவேண்டும். ஆனால் இன்று ஆலிம்களை பள்ளி தலைவரும்,அவர் கற்று கொடுக்கும் மதரஸாவின் தலைவரும் தான் வழி நடத்தக் கூடியவர்களாக உள்ளனர். ஆனால் கிறிஸ்துவ சமுதாயத்தில் அவர்களின் ஃபாஸ்டருக்கு கட்டுபட்டு நடந்து அவர்களின் சமுதாயத்தில் பல விசயங்கள் சாதிக்கப்படுகின்றன.

உலகம் விஞ்ஞான வளர்ச்சியில் வளர்ந்து வீர நடை போட்டுக் கொண்டிருக்கின்ற காலங்களில் கம்யூட்டர் கல்வியா? அது எங்களுக்கு கற்றுத்தரபடவில்லை. பத்திரிக்கைகளா? அது படிப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள். பொது அறிவுகளா? அது எங்களுக்கு புதுமை என்றுக் கூறி அஞ்ஞான காலத்தில் இருந்த அதே பாடத்திட்டத்தை தான் விஞ்ஞான காலத்திலும் வைத்துக் கொண்டிருந்தால் எப்படி சமூகத்தை வழி நடத்துவார்கள்? சொந்த காலில் நின்று சுய கருத்தை சொல்ல தொழில் தெரிய வேண்டும் என்றால் எங்களின் தொழிலே தொழுகை நடத்துவதும், ஓதி கொடுப்பது மட்டுமே என்று கூறும் அளவுக்கு தான் அவர்களின் வாழ்க்கை உள்ளது.

மதரஸாவின் பாடத்திட்டத்தில் தொழில் கல்வியை கற்றுக் கொடுத்தால் சொந்த காலில் நின்று இருப்பார்கள்.தொழில் செய்வது ஆலிம்களுக்கு தடை செய்யப்பட்ட ஒன்றா? அறிஞர்களில் மிகப் பெரும் அறிஞராக வாழ்ந்த அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்கள் ஆட்சி பொறுப்பை ஏற்றுக் கொண்டு ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் போதும் கூட தன் சுய தொழிலான ஜவுளி தொழிலை கைவிடாமல் தொழில் செய்தார்கள் என்ற வரலாற்று குறிப்பை பார்க்க முடிகின்றது.அதே முன்மாதிரியை ஏன்? ஆலிம்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை? அதற்கான சூழ்நிலைகளை ஏன் சமூகம் உருவாக்கிக் கொடுக்கவில்லை

அரசியலா அது ஆபத்தானது

அரசியலா அதற்கும் இஸ்லாத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தான் இன்றைய ஆலிம்கள் நினைத்து அதை விட்டு விலகி நிற்கின்றனர்.சமுதாயத்தில் உள்ள செல்வந்தர்களும் அரசியல் என்றால் ஆபத்து என்று நினைத்து விலகி நிற்கின்றனர்.

அல்லாஹ்வும்,அவன் தூதரும் அரசியலை கற்று தரவில்லையா? அதற்கான முன் மாதிரி இஸ்லாத்தில் இல்லையா? அப்படியானால் மக்காவையும்,மதீனாவையும் நபியவர்கள் எப்படி ஆட்சி செய்தார்கள்? அவர்களுக்குபப்பின் கலீஃபாக்களின் ஆட்சியும்,அதற்குப்பின் இஸ்லாமியர்களின் ஆட்சியும் எப்படி நுடை பெற்றது? இவர்களெல்லாம் முஸ்லிம்கள் அல்லாதவர்களிடம் மட்டும் தான் ஆட்சி செய்தார்களா? மாற்று சமூக மக்களின் மீது அவர்களின் ஆட்சி அதிகாரங்கள் இல்லாமல் இருந்ததா? அல்லது

பொருளாதாரத்தை கையாளும் முறைகள் தெரியாமல் இருந்தார்களா? இவர்களுக்கு அரசியல் தெரியாமல் இருந்தது என்றால் இஸ்லாமிய நாடுகளை எப்படி ஆண்டார்கள்? இந்தியாவில் கலிஃபா உமரின் ஆட்சியை நிறுவ வேண்டும் என்று காந்தி அடிகள் எதை வைத்து கூறினார்? இஸ்லாமிய குற்றவியல் சட்டங்களை நாட்டில் இயற்றினால் தான் குற்றங்கள் குறையும் என்று மற்ற ஆட்சியாளர்களால் எப்படி கூற முடிகின்றது? இவர்கள் ஆட்சி காலங்களில் பொருளாதார சட்டங்கள் சீராக இருந்ததால் தான் ஏழைகளின் வயிறுகள் நிரம்பின.


அன்றியும், இவர்கள் (எத்தகையோரென்றால்) இவர்களுக்கு நாம் பூமியில் இடம்பாடாக்கிக் கொடுத்தால், இவர்கள் தொழுகையை முறையாகக் கடைப்பிடிப்பார்கள். ஜகாத்தும் கொடுப்பார்கள். நன்மையான காரியங்களைச் செய்யவும் ஏவுவார்கள். தீமையை விட்டும் விலக்குவார்கள் - மேலும், சகல காரியங்களின் முடிவும் அல்லாஹ்விடமே இருக்கிறது. அல்குர்ஆன் 22:41

ஆர்பாட்டங்களும் போராட்டங்களும் மட்டுமே போதாது!!

இன்று முஸ்லிம்கள் மத்தியில் தங்களின் உரிமைகளுக்காகவும், தேவைகளுக்காகவும் ஆண்களும்,பெண்களும் வீதியில் இறங்கி போராடும் நிலையில் தான் உள்ளோமே தவிர சட்ட மன்றத்திலும், நாடாளமன்றத்திலும் நம் சமூக மக்களின் உரிமைகளை பற்றி பேசுவதற்கு நாதி இல்லாத சமுதாயமாக உள்ளோம் என்பது கவலைக்குரிய விசயமாக உள்ளது.முன்னால் சென்ற நம் முன்னோர்களில் பலர் சட்ட மன்றத்திலும், நாடாளமன்றத்திலும் முத்திரை பதிக்கும் அளவு உரிமைகளுக்காக குரல் கொடுத்தார்கள்.

ஆனால் இன்று இருக்கக் கூடிய ஒரிரண்டு உறுப்பினர்கள் ஆட்சியாளர்களுக்கு விலை போய் விடுகின்றனர். முஸ்லிம் மக்களின் வாக்குகளை பெற்று சமூகத்திற்கு எதிரான பிரச்சனைகளில் தலையிட்டு குரல் கொடுப்பதற்கு பதிலாக அவர்களிடம் அடங்கி போய் விடுகின்றனர்.மறு பக்கம் நல்லவர்களும்,படித்தவர்களும் அரசியல் என்பது சாக்கடை அதில் நாம் வீழ்ந்து விடக்கூடாது என்று விலகி நிற்கின்றனர்.மக்களிடத்தில் செல்வாக்குடன் உள்ள திறமையான ஆலிம் உலமாக்களும் அதே நிலையில் தான் உள்ளனர்

.அரசியல் ஒரு சாக்கடைதான் அதை சுத்தப்படுத்தும் கடமை நமக்கில்லையா? இஸ்லாத்தை விடுத்து மற்ற மதங்கள் போதிக்கும் கொள்கைகள் அல்லாஹ்வின் பார்வையில் சாக்கடைதான். ஆனால் அதை புரிந்துக் கொண்டு மக்களிடத்தில் தூய இஸ்லாத்தை மக்களுக்கு எத்தி வைத்து அதை உண்மை என உணர்ந்த காரணத்தால் இஸ்லாமிய வாழ்க்கையை தன் வாழ்வியலாக ஏற்றுக் கொண்டவர்கள் பலர் உள்ளனர். மற்ற மதங்கள் சாக்கடை என்று நாம் ஒதுங்கிக் கொண்டு இருந்தால் இஸ்லாமிய அழைப்பு பணியில் நாம் வெற்றி பெற்றிருக்க முடியாது.

மேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர். அல்குர்ஆன் 3:104

அவனே தன் தூதரை நேர் வழியுடனும், சத்திய மார்க்கத்துடனும் அனுப்பி வைத்தான் - முஷ்ரிக்குகள் (இணை வைப்பவர்கள், இம்மார்க்கத்தை) வெறுத்த போதிலும், எல்லா மார்க்கங்களையும் இது மிகைக்குமாறு செய்யவே (அவ்வாறு தன் தூதரையனுப்பினான்.) அல்குர்ஆன் 9:33

அரசியல் சாக்கடைதான் ஆனால் அதல் மூழ்கி விடாமல் அதை சுத்தப்படுத்தக் கூடிய தலைவர்களை நாம் ஏன் உருவாக்க முடியாது.நபி (ஸல்) அவர்கள் காலத்தில் எப்படி பட்ட தலைவர்களை உருவாக்கினார்கள்.பல நாட்டின் ஜனாதிபதிகள்,ஆளுநர்கள் போன்ற ஆட்சியாளர்களை உருவாக்கி ஆட்சி பீடத்தில் அமர்ந்து வெற்றி பெற்றார்கள்.

அவர்களின் சொல்,செயல்,நாவு,கை அனைத்தும் சுத்தமானவர்களாக இருந்ததால் மக்களின் ஆதரவையும்,திருப்தியையும் பெற்றார்களே அது எப்படி சாத்திமாகியது? அது நபி (ஸல்) அவர்களின் பாசறையில் பெற்ற பாடங்களாகும்.ஆனால் இன்று உருப்படியான ஒரு சட்டமன்ற உறுப்பினரை கூட உருவாக்க முடியவில்லையே சிறிது சிந்தித்து பார் சமுதாயமே!!!


எனவே இன்றைய தேவை சிறந்த சுயநலமிக்க தலைவர்களை உருவாக்குவதே.அவர்கள் தேசிய நீரோடையில் மூழ்குவதைப் போல் அரசியல் சாக்கடையில் மூழ்காமல் என்றும் தனித்துவத்துடன் விளங்கக் கூடிய தலைவர்கள் உருவாக வேண்டும்.

இன்று அரசியல் வாதிகள் என்றால் போக்கிரிகள், அநியாயக்காரர்கள்,ஊழல் பேர்வழிகள்,மக்களின் பணத்தை அநியாயமாக பிடுங்கி சாப்பிடுபவர்கள் என்ற எண்ணம் தான் மக்களின் மனதில் பதிய வைக்கப்பட்டுள்ளது. இதை ஏன் ஒரு உண்மை முஸ்லிமால் மாற்றி காண்பிக்க முடியாது.உமர் இப்னு கத்தாஃப்,உமர் இப்னு அப்துல் அஜீஸ் போன்ற சிறந்த ஆட்சி தலைவர்களை தந்த மார்க்கம் அல்லவா இது.

துண்டு படாதே!! ஒன்று படு!!!

நமக்கு மத்தில் ஆயிரம் உட்பூசல்களும்,கருத்து வேறுபாடுகளும் இருக்கலாம்.ஆனால் நமது இலட்சியம்,நமது உரிமைகள் என்று வரும் பொழுது நாம் ஒன்று பட வேண்டும்.இன்று பாசிச வகுப்பு வாத கட்சிகள் ஆயிரம் துண்டுகளாக பிரிந்து நிற்கின்றனர்.

ஆனால் அவர்களுக்கு ஒரு பிரச்சினை என்று வரும் பொழுது பாம்பு புற்றிலிருந்து படை எடுப்பது போன்று ஈசலாய் புறப்படுகின்றனர்.சமீபத்தில் நடந்த மலேகான் குண்டு வெடிப்பில் சம்பந்த பட்டவர் பெண் சாமியார் பிரக்யா சிங் தாகூர்; முறு;றும் முன்னாள் ராணுவ தளபதிகள் சம்பந்த பட்டுள்ளனர் என்று பத்திரிக்கையில் பரபரப்பான செய்திகளாக வந்தன.

அவர்களின் சட்ட உதவிகளுக்காக தனியார் வங்கியில் கண்க்கு துவங்கபட்டு உங்களிகளின் உதவிகளை இந்த முகவரிக்கு அனுப்பி தாருங்கள் என்று கூறி பகிரங்கமாக விளபரங்கள் வெளிவந்தன.

ஆனால் ஒரு அப்பாவி முஸ்லிம் தகுந்த காரணங்கள் இல்லாமல் சிறைச்சாலையில் அடைக்கப்படுகின்றான்.அவன் ஏதாவது ஓர் அமைப்புகளைச் சார்ந்தவனாக இருந்தால் அவர்களால் அவனுக்கு உதவிகள் வழங்கப்படுகின்றன.இல்லையேல் அவன் அநாதையாக விடப்படுகின்றான்.ஏன் இந்த அவல நிலை? நமக்காக குரல் கொடுக்கும் அரசியல் தலைமை இல்லாததே.

இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள. நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள். அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த நிஃமத்களை (அருள் கொடைகளை) நினைத்துப் பாருங்கள். நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள் - உங்கள் இதயங்களை அன்பினால் பிணைத்து. அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள். இன்னும், நீங்கள் (நரக) நெருப்புக் குழியின் கரை மீதிருந்தீர்கள். அதனின்றும் அவன் உங்களைக் காப்பாற்றினான் - நீங்கள் நேர் வழி பெறும் பொருட்டு அல்லாஹ் இவ்வாறு தன் ஆயத்களை -வசனங்களை உங்களுக்கு தெளிவாக்குகிறான். அல்குர்ஆன் 3:103

இஸ்லாம் கூறுகின்ற ஒற்றுமை நம்மிடம் வராத வரை அரசியலில் சாதிக்க முடியாது.பாபரி மஸ்ஜித் யாருடைய தனிப்பட்ட சொத்துமல்ல.அந்த மஸ்ஜித் உடைக்கப்பட்டதற்காக வருடம் வருடம் குரல் கொடுத்துக் கொண்டுதான் இருக்கின்றோம்.ஆனால் அந்த குரல் எப்படி ஒலிக்கப்படுகின்றன என்பது தான் வேதனையிலும் கொடிய வேதனை.

சென்னை அண்ணா சாலையில் ஒரு கூட்டமும்,மவுண்ட் ரோட்டில் மற்றொரு கூட்டமும்,எழும்பூரில் மற்றொரு கூட்டமும் போராட்டம் நடத்துகின்றனர். இந்த அனைத்து அமைப்பினருக்கும் பாபரி மஸ்ஜித் என்பது அல்லாஹ்வின் இல்லம் அதை அடுத்தவனுக்கு விட்டு கொடுக்கக் கூடாது என்ற தெளிவான சிந்தனை எல்லோருக்கும் இருக்கின்றது.ஆனால் கொள்கை ஒன்று கோணங்கள் வேறாக இருக்கின்றன. இவர்கள் சமுதாயத்திற்கு கொடுக்கும் குரல்கள் சீறி ஆட்சியாளர்களின் காதுகளில் விழுமா? அல்லது சிதறுண்டு காற்றோடு கலந்து விடுமா?


ஆயிரம் பிரச்சினைகள் இருக்கலாம்.ஆனால் அதை வெளிப்படுத்தி ஒருவருக்கொருவர் விமர்சித்தும், கேலி செய்தும் சமுதாயத்தின் சண்டைக் கோழிகளாக மாறியதால் அரசியல் சாக்கடை என்பவர்களுக்கு வழுவான ஆதாரங்களாக மாறி விடுகின்றது.எனவே சமூகத்தின் பிரச்சினைகளுக்காக ஒன்று படுவதே இன்றைய காலத்தின் கட்டாயம்.

ஆன்மீகம் மட்டும் போதாது அரசியலும் வேண்டும்

பள்ளி, கல்லுரிகளில் இளைஞர்களுக்கு பாடங்கள் நடத்தப்படுகின்ற போது அரசியல் பாடங்களையும் நடத்த வேண்டும்.எந்த சமூகம் கல்வியில் கரை காணுகின்றார்களோ அவர்கள் சகலத்திலும் சாதித்து வருகின்றனர்.

பள்ளி,கல்லுரிகளில் படிக்கும் இளைஞர்கள் தேர்வில் தோல்வி அடைந்தால் தந்தை எவ்வழி தனயனும் அவ்வழி என்று அரபு நாட்டு பயணம் தான் அடுத்த இலக்கு என்ற நிலை மாறி அதிகாரத்தின் அனைத்திலும் அங்கம் பெற வேண்டும்.என்ற எண்ணங்களை உருவாக்கக்கூடிய ஆசிரியர்களும்,பெற்றோர்களும் மிக மிக சமூகத்திற்கு தேவைப்படுகின்றார்கள்.

இவ்வளவு காலமாக மற்ற அரசியல் தலைவர்கள் இந்த சமூகத்தின் மீது சவாரி செய்தது போதும்.வரும் காலங்களில் எங்களின் சவாரி தனியாகத்தான் இருக்கும் என்று தனித்துவத்துடன் தனியாக அரசியல் களம் காணுவதே சாலச்சிறந்தது.

அடிப்படைகள் அரங்கேற வேண்டும்

ஒவ்வொரு சமுதாயமும் ஜாதிவாரியாக,இன வாரியாக ஒட்டுகளின் பட்டியலை கையில் வைத்துக் கொண்டு தேர்தல் காலங்களில் அதிகார வர்க்கங்களை அதிர வைக்கின்றனர்.ஆனால் நம்முடைய சமூகத்தில் நாடுவாரியாக,மாநிலவாரியாக,மாவட்டவாரியாக,வட்டவாரியாக வாக்காளர் பட்டியல் எடுத்து வைக்கப்பட்டிருக்கின்றதா? இல்லை அதற்கான முயற்ச்சிகள் எடுக்கப்பட்டுள்ளதா இல்லை.

வாக்காளர்களின் தகுதிகள் இருந்தும் வாக்களிக்க முடியாதவர்களாகதான் சமுதாயத்தின் ஆண்களும்,பெண்களும் இருக்கின்றனர்.

சமுதாய மக்களுக்கு மத்தியில் குறிப்பாக இளைஞர்களுக்கு மத்தியில் அரசியல் வழிப்புணர்வு வகுப்புகளும்,கருத்துகளும் பாடங்களாக நடத்தப்பட வேண்டும்.முஸ்லிம் ஆட்சியாளர்கள் ஆட்சி செய்திருக்கின்றனர்.

அரசியலில் எங்களுக்கும் பங்கு உண்டு.எங்களுக்கும் உரிமைகள் உண்டு.என்ற சீரிய சிந்தனைகளோடு செயல்பட்டால் அரசியலில் நாமும் இன்ஷா அல்லாஹ் சாதிக்க முடியும் என்பதில் இரண்டாவது கருத்திற்கு இடமில்லை.

0 கருத்துகள்:

இராஜகிரி பைத்துல்மால் ©2011 rajaghiribaithulmal.blogspot.com. All Rights Reserved. Hosted by Rajaghiribaithulmal is Designed and Developed by rajaghiri.online